என் உணர்வுகளை விமர்சியுங்கள்.. ஆனால்....??

என் வரம் நீ அம்மா....!!


வேதனையிலும்
என்னை புறம் தள்ளிய
தேவதை நீ....

முகம் கூசாத
முழு வெண்ணிலா...
வாடாத தங்க ரோஜா..

உள்ளத் தொட்டிலில்
உறங்க வைக்கும் நீ,
என் உடலுக்கு
வெப்பம் தரும் சூரியன்...
வெப்பம் போக்கிடும்
தண்மையும் நீயே...

தோளில் வைத்து
உலகம் காட்டியவள்  நீ..
என்னை சுற்றி
சுழன்றுகொண்டிருக்கும்
மொத்த உலகமும் நீ...

இறைவன் படைப்பில்
நிறைவானவள் நீ...
என்னை பிரதிபலிக்கும் 
நிஜ கண்ணாடி...

பாதி ராத்திரி
துக்கம் மறந்தாய்..
பாவி என்னால்
எல்லாம் இழந்தாய்..

உச்சி முகர்ந்தாய்
உள்ளம் மகிழ்ந்தாய்..

முதல் நொடி
அள்ளி அணைக்கையில்,
நான் என்ன ஆவேன் என்று
நினைத்தாயோ தெரியவில்லை...

கன்னத்தில் குழி விழ
நான் சிரிக்கையில்
என்ன நினைத்தாய் அம்மா...??

இரத்தத்தை பாலாய்
மட்டும் ஊட்டவில்லை...
தமிழ் கொண்டு ஊட்டினாய்..
இதய துடிப்பில்
இசை சொல்லித்தந்தாய்...

உன்னை முதல் முறை
அம்மா என்றழைக்கையில்..
கவிதை சொல்வேன் என்று
நினைத்தாயா....?

நீ சப்பி ஊட்டிய
சோறு என்னும் என்
தொண்டையில் இனிக்கிறது...

நடந்து கால் களைக்கையில்
கை நீட்டினாய்...
உன் கைகள் தான் என்
நடை வண்டி..

உன் முதுகில் தான்
ஊர்வலம் போனேன்...
உப்பு மூட்டை தூக்குவதற்காய்
எத்தனை முறை அடம்பிடித்தேன்..
பொறுமையை எங்கே கற்றுக்கொண்டாய்..

உன் மடி போல பஞ்சனை
இதுவரை  கிடைக்கவில்லை..

இப்போதும் என்னை
கட்டியிருப்பது உன் அன்பு
அணைப்புக்கள் தான்...

எத்தனை தவறுகள்
புரிந்திருக்கிறேன்...
தண்டனையாய்
முத்தம் தருவாய்..

அதற்காய் தப்பு செய்யவே
பழகிவிட்டேன்..

அம்மா
உனக்குள் அடங்கியவையே
அத்தனையும்...
என் முதல்ஆசான் நீ..

நிலாச்சோறு உன்னால்
உண்டிருக்கிறேன்..
என்னை விட பசியாறியது நீதான்..
என் கற்பனைக்கு விதை
நீ சொன்ன
கட்டுக்கதைகள் தான்...

நீ சேமித்து வைத்த
பிரியங்கள் செலவழிந்து விடாது...
உன் அன்பை வீண் விரயம்
செய்யவில்லை...

செதுக்கிய கல்லை
கடவுள் என்பாய் - இல்லை
கருவில் எனை செதுக்கிய
கடவுள் நீ...

நீ யார்
என்னை போல நான்..
நான் யார்..
மறு பாதி நீ...

நீ யார்
என் முதல் எதிரி..
உன்னோடு தான் அதிக சண்டை 
பிடித்திருக்கிறேன்...
உன்னால் தான் பலமானேன்..

என் முதல் நண்பி..
என் தோல்விகளை வெற்றியாய் 
பார்த்தவள் நீ மட்டும் தான்...
உன்னால் தான் உடைந்துபோகவில்லை...

என் முதல் காதலி..
உன் போல் தான்  மனைவி வேண்டும் 
என்று நினைத்திருக்கிறேன்.

உன்  தவம் நான் என்றாய்...
இல்லை
என் வரம் நீ அம்மா....!!


தமிழ்நிலா

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான வரிகள்... படிக்கும் போதே கண்கள் கலங்குகிறது... சரி அது இருக்கட்டும்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…

இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

கீதமஞ்சரி said...

தாயின் அளவிலாப் பெருமைகளை அளவிட முயன்ற முயற்சியில் பெரும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். பாராட்டுகள்.

Unknown said...

அம்மாவின் பெருமைகளை அருமையாக கூறியுள்ளீர்கள் . நன்றி

Anonymous said...

வணக்கம் நண்பரே!

உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
யாழ் மஞ்சு

sury siva said...

அய்யா தமிழ் நிலாவே !
அடுத்த முறை இது போல‌
'அம்மா' வின் கவிதை பாடி
என்னை
அடுத்த பதிவுக்குக் கூட போக விடாமல்
தடுக்காதே !!

இதுவரை நான்
இருபது தரம்
படித்துவிட்டேன்.
இன்னும் ஒரு தரம்
என்கிறது
என் மனம். ஏன் எனின்
அம்மா என்பது
பொன் மனம்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com



Sanjay Thamilnila said...

நன்றி தனபாலன் ஐயா... நன்றி வலைச்சரம் ஆசிரியருக்கும்

Sanjay Thamilnila said...

நன்றி கீதமஞ்சரி மற்றும் ஞானம் சேகர் நன்றி உறவுகளே..

Sanjay Thamilnila said...

நன்றி சுப்பு ரத்தம் ஐயா நன்றி..

sury siva said...

அய்யா,
அடியேன் பெயர்
சுப்பு ரத்தினம்
ரத்தம் அல்ல.
ஒரு கணம்
பயந்துவிட்டேன்.
ரத்தத்தைப் பார்த்து அல்ல.
ரத்தினத்தை இழந்தோமோ என

சுப்பு ரத்தினம்.

Sanjay Thamilnila said...

சுப்பு ரத்தினம் ஐயா
மன்னித்துக்கொள்ளுங்கள்.
தவறாக பதிவிட்டமைக்கு..
நன்றி சுட்டிக்காட்டியமைக்கு.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...